

யாரு கைய வெட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டதுனு நான் கண்டிப்பா நிரூபிப்பேன்.. ஆர்த்தியோட அம்மா சுஜாதா அதிரடி பேச்சு!


தயாரிப்பாளரும், ஆர்த்தி ரவி தாயுமான சுஜாதா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அந்த பேட்டியில் பேசிய சுஜாதா, “ரவி மோகன் தனது குழந்தைகளை பார்க்கவிடவில்லை என கூறியது பகிரங்கமான பொய். அதை யாராலும் பண்ணமுடியாது”. மேலும் ரவி மோகனை பிளாக்மெயில் பண்ணித்தான் திருமணம் செய்யவைத்ததாக குற்றச்சாட்டு எழுகிறது என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு சுஜாதா, “2008ல் பத்திரிகை ஒன்றில், யார் கையறுத்துக்கொண்டு திருமணம் செய்துகொண்டார் என வந்திருக்கிறது.
அதை தேடி கண்டுபிடித்து நானும் நிரூபிப்பேன். சினிமாவில் நடிக்கமாட்டேன் என சொன்னது அவருடைய இஷ்டம், இத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றால், அது அவருடைய முடிவு அதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை. எனது மருத்துவ செலவிற்கு மாதம் ரூ 25,000 அனுப்பியதாக சொல்கிறார். அவ்வாறு நடக்கவில்லை, இருந்தாலும் மருமகனாக அவர் கடமையை செய்திருக்கிறார். நாங்கள் இதுவரைக்கும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பேச்சையும் நாங்கள் எடுக்கவில்லை. எல்லா பெற்றோர்களும் அவர் அவர்களின் குழந்தைகளுக்காகதான் இருக்கிறார்கள், நானும் எனது மகள்களுக்காக இருக்கிறேன். மேலும் ரவி மோகன் இந்த 2 வருடத்தில், அவர்களின் மகன்களை 2 முறையே பார்த்திருக்கிறார். விவாகரத்து பிரச்சனை தொடங்கி 2 வருடங்களுக்கும் மேல் ஆகிறது, ஆனாலும் தற்போதுவரையிலும் அவர் மீது நாங்கள் நல்ல நம்பிக்கை வைத்திருக்கிறோம். இதுவரைக்கும் ஏதும் தவறாக பேசவில்லை, எதிர்காலத்திலும் கூட அவரை பற்றி தவறாக எதுவும் பேசமாட்டோம்” என அதில் அவர் பதிலளித்து பேசியுள்ளார்.