ஆர்.நல்லகண்ணு என்ற மாபெரும் எளிமை -ஆளுமை ….!!
பிரபல அரசியலாளர், வழக்கறிஞர், ‘அக்கப்போர்’ நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அக்கப்போர் நாளிதழ் Akkappore.com / சொடுக்குங்க

அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்று தமிழில் மூதுரை உள்ளது. பொதுவாக மனிதர்கள் தங்களின் இளம் பருவதில் அல்லது தான் பிறந்த இடத்தின் சுற்றுப்புறத்தை அங்கு நிலவும் நன்மை தீமைகளைக் கண்டு ஒரு நியாய உணர்ச்சியின் அடிப்படையில்தான் தங்களுக்கான பிற்கால க் கொள்கைகளை வகுத்துக் கொள்கிறார்கள். சிலர் அதன் பொருட்டு உறுதியாகவும் இருப்பார்கள். நாளடைவில் அவர்களுடைய கல்விப் பருவங்கள் அனுபவங்கள் அனைத்தும் ஒன்று சேரும்போது” தான் எதன் பக்கம் நிற்க வேண்டும்” என்பதை அறிகிறார்கள்.

அப்படி ஒரு சிறு பிராயத்தை வகுத்துக் கொண்டவர் தான் ஈடு இணையற்ற தலைவராக இன்று வரை விளங்கிக் கொண்டிருக்கிற நூறு வயதை தொட்டுவிட்ட அருமைத் தலைவர் தோழர் நல்லகண்ணு!

அவர்களைப் பற்றிய என் நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்வதில் ஆறுதல் அடைகிறேன்.

பொதுவுடைமையை இயக்கத் தலைவர் நல்லகண்ணு 101… போராடி உயர்நிலையை அடைந்து; அனைவரும் போற்றும் வண்ணம் அரசியல் களத்தில் உயர்ந்து நின்றார்.

எங்கள நெல்லை மாவட்ட அரசியலில் இவரோடு மற்றும் நீண்ட கால சட்டமன்ற உறுப்பினராக இருந்த சோ. அழகர்சாமியோடு 1972 முதல் இருந்தவன்.

அக்காலத்தில் பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் 1925 ஆம் ஆண்டின் வருட இறுதி டிசம்பர் மாதம் 26ஆம் தேதி நல்ல கண்ணு பிறக்கிறார். வளர்ந்து 18 வயது ஆனபோதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொள்கிறார்.

அது பிரிட்டிஷாரின் ஆட்சி காலம்! இந்தியக் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. முதன்முதலாக 1914 இல்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிமுகமும் துவக்கமும் நிகழ்ந்தது.

டாங்கே நம்பூதிரி பாட் போன்ற தலைவர்கள் இந்தியா முழுக்க உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கான இடதுசாரி இயக்கங்களை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருந்த வேளையில் அவ்வியக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு 25 ஆண்டு காலம் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் நல்ல கண்ணு திகழ்ந்தார்.

அவரது தீரமிக்க செயல்களில் ஒன்று என்னவெனில் அந்த இளம் வயதிலேயேஸ்ரீவைகுண்டம் பகுதியில் தனியார் சிலர் அரசு விரோதமாக ப்பதுக்கி வைத்திருந்த இரண்டாயிரம் நெல் மூடைகளை கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார்.

இவருடைய முதல் நடவடிக்கை இதுவாகும். அப்போதுதான் நல்லகண்ணு அவர்கள்இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்ட போது . வெடிகுண்டு வைத்திருந்ததாகச் சொல்லி நெல்லைச் சதி வழக்கில் நல்ல கண்ணு கைது செய்யப்பட்டார்.

சிறையில் பல சித்திரவதைகளுக்கும் புண்படுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டார் அவரது முகத்தில் இருந்த மீசையை நெறுப்பால் கறுக்கியம் வேரோடு பிடுங்கியும் சித்திரவதை செய்த பிரிட்டிசார் அவரைப்பல அடக்குமுறைக்கு உள்ளாக்கினார்கள்! அதன் பொருட்டு தான் ஒருபோதும் தான் இனி மீசை வைத்துக் கொள்ளப்போவதில்லை என்று இன்றுவரை மழித்த முகமாகவே இருக்கிறார்!.

ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை!” நாங்கள் வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று ஆரம்பித்த எங்கள் அரசியல் பயணம் இன்று வரை தொடர்கிறது.” என்று சொல்லும் நல்லகண்ணு அவர்கள் இன்று 100 வயதைத் தொட்டு இருக்கிறார்!

அவர் அந்த சதி வழக்கில் மதுரைச் சிறையில் இருந்தபோது தூக்கிடக் கொண்டு சென்ற கம்யூனிஸ்டு கிளர்ச்சியாளர் பாலன் அவர்களை (அதிலிருந்து மீண்டு தூக்குமர நிழலில் என்ற நூலை எழுதியவர்) அழைத்துச் சென்றபோது சிறைக்கு முன்பு கூடியும் உள்ளேயும் இன்குலாப் ஜிந்தாபாத் செங்கொடி வாழ்க என்று நாங்கள் எல்லாம் உணர்ச்சித் ததும்பக் கோஷமிட்டடோம் என்று அவர் என்னிடம் சொல்லக் கேட்டதுண்டு..

அப்போது சிறையில் இருந்த பி ராமமூர்த்தியும் தலைமறைவாக இருந்த மணலி கந்தசாமியும் பிரச்சாரத்திற்கு செல்லாமலே மக்களை சந்திக்காமலேயே சுதந்திரத்திற்கு பிறகான சட்டமன்றத் தேர்தலில் 1952ல் வெற்றி பெற்றார்கள். மேலும் சிறையில் இருந்த தோழர் பாலதண்டாயுதம் அவர்களை நாக்பூர் சிறைக்கு மாற்றி விட்டார்கள்.

சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து பல கோரிக்கைகளுக்காகப் போராடியதை எல்லாம் நல்லகண்ணு என்னிடம் சொல்லி உள்ளார்.

அதேபோல மாயாண்டி பாரதி பா மாணிக்கம் போன்ற தலைவர்களெல்லாம் நல்ல கண்ணுவுடன் சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்தார்கள்.

சிறையில் நல்லகண்ணு அவர்களுடைய எண் 96 58! அவர் சிறையில் இருந்த போது எழுதிய எழுத்துக்கள் கடிதங்கள் போன்றவற்றை இன்னும் பத்திரமாக வைத்துள்ளார்.

அவர் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் பள்ளி ஆசிரியர் திருமதி ரஞ்சிதம் அவர்களுடன் திருமணம் நடந்தது! திருமணத்தை நா வானமாமலை முன்னின்று நடத்தி வைத்தார்.

இவர்களெல்லாம் கம்யூனிஸ்ட் போராட்டத்தை இணைந்து முன் எடுத்தார்கள். அப்போது ராஜாஜி கம்யூனிசத்துக்கு முழுமையான எதிரியாக இருந்தார்.
அன்றைக்கு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன கம்யூனிஸ்ட்களும் மொழிவாரி மாநிலத்தை ஆதரித்தார்கள்

அந்த நேரத்தில். பா ஜீவானந்தம் ஐக்கிய தமிழகம் என்ற நூலில் கன்னியாகுமரி மாவட்டத்துடன் செங்கோட்டையும் திருநெல்வேலியும் இணைக்க வேண்டும் என்று எழுதினார். ஆந்திராவில் சுந்தரய்யா விசால ஆந்திரம் வேண்டுமென்று கம்யூனிஸ்ட் சார்பாக முன்னெடுத்தார்.

அதேபோல் கேரளத்தில் நம்பூதிரி பாட் நவ கேரளம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்! பம்பாயில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எஸ் ஏ டாங்கே சம்யுக்த மகாராஷ்டிரா வேண்டுமென்றும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அன்றைய சென்னை மாகாணத்தில் இன்றைய ஆந்திர பிரதேசம் கர்நாடகம் மலபார் தேவிகுளம் பீர்மேடு போன்றவை எல்லாம் இணைந்து இருந்தது. கன்னியாகுமரி செங்கோட்டை நீங்கலாக. ஐக்கியத் தமிழகம் வேண்டும் என்று ஜீவா அவர்கள் கூறும் போதும் அதற்கான கூட்டங்கள் நடந்த போதும் நல்ல கண்ணு வந்து கலந்து கொண்டார்.

ஜீவா சிலப்பதிகாரம் கம்பராமாயணம் மற்றும் சங்க இலக்கியங்களில் மிக தேர்ச்சி பெற்றவர். கம்பராமாயணத்தை எரித்து அண்ணா அன்று “தீ பரவட்டும் “என்று பிரச்சாரம் செய்த போது ஜீவா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழின் புதிய சொல்லாட்சி முறையில் கம்பன் எழுதிய கம்ப ராமாயணம் தமிழின் இலக்கிய சாட்சிக்கு மிக முக்கியமானது என்று ஜீவா வலியுறுத்தினார்.

தமிழ் கூறும் நல் உலகத்திற்கு அது ஒரு கொடை என்றும் வர்ணித்தார். கம்பருடன் திருவள்ளுவர் பாரதியெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்று ஜீவா பல வகையில் தன் புலமை சார்ந்து எடுத்துரைத்தார். தொடக்கத்தில் திராவிடர் கழக பெரியாருடன் நட்பாக இருந்து ஆதரித்து வந்த ஜீவா இம்மாதிரி இலக்கிய வளமைகள் காரணமாக அதைப் பெரியாரியம் மறுத்து கேலி செய்யும் போது பெரியாரை விட்டு அவர்வெளியேறியதும் உண்டு என்றெல்லாம் நல்ல கண்ணு என்னிடம் சொல்லி இருக்கிறார். ஜீவாவிற்கும் சுத்தானந்த பாரதிக்கும் இருந்த நெருக்கம் பற்றியும் கூறிய நல்லகண்ணு அவர்கள் ஜீவா ஒரு பெரிய தலைவராக வந்திருக்க வேண்டும் என்றும் சொன்னார். அந்த நேரத்தில் திராவிடக் கட்சிகள் மிகுந்த பலத்துடன் இருந்தார்கள்.

சீனிவாசராவ் பாலதண்டாயுதம் போன்றவர்கள் திராவிட கழகத்தை எதிர்த்தாலும் திராவிட இயக்கத்தவர் தனித்தமிழ் தனி நாடு போன்றவற்றை தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.. என்பதும் வரலாற்றில் நடந்த நிகழ்வுகளாக இருந்தது.

நல்ல கண்ணு அவர்கள் மிக வருத்தப்பட்டு” என் சங்கரய்யா நாங்கள் எல்லாம் சிறையில் இருந்து சுதந்திரத்திற்கு போராடிய உண்மையான வரலாற்றுக்கு அப்பால் இந்தத் திராவிட இயக்கத்தினர் தனித்தமிழ் தனி நாடு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து உணர்ச்சிததும்ப மக்களிடம் பேசிப் பேசியே செல்வாக்கு பெற்று விட்டனர் என்பதன்றி அது முழுமையான மக்களாட்சி தத்துவத்தை நடத்தவில்லை” என்று வருத்தப்பட்டார். அன்று இந்தி எதிர்ப்பு போராட்டமும் ராமர் எதிர்ப்பு போராட்டமும் அவர்களின் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது. இப்படி அவர் சொன்னதையெல்லாம் எனது குறிப்புகளில் நான் எழுதி வைத்திருக்கிறேன்.

ஒருமுறை கேரள மூணாறில் இடைத்தேர்தல் நடந்தது. 1952 இல் பொதுவுடைமை கட்சி அங்கு போட்டியிட்டது. அப்போது இ எம் எஸ் அவர்கள் சொன்னார் நாங்கள் முதலமைச்சர் அதிகாரத்தில் இருக்கிறோம்.

ஆகவே நாங்கள் மூணாறு வந்து பிரச்சாரத்தை செய்ய மாட்டோம். செய்வதும் நல்லதல்ல என்றும் கண்ணியமாக கூறினார்.

எங்களது கட்சிக்காரர் வேட்பாளராக நிற்பதால் நாங்களோ அமைச்சர்களோ வரமாட்டோம் என்று கூறிவிட்டார்.

இப்படி அவர் சொன்ன பிறகு தமிழகத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் எல்லாம் மூணாறு சென்று பிரச்சாரம் செய்து பொது உடைமை கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்தோம் என்றெல்லாம் நல்ல கண்ணு கூறினார்.

இப்படி ஒரு இடைத்தேர்தல் சமயத்தில் அமைச்சர்கள் உட்படபிரச்சாரத்திற்கு செல்ல மாட்டோம் மக்கள் எங்களை மதித்து ஓட்டு போடுவார்கள் என்று நம்பிய இ எம் எஸ் அவர்களின் நேர்மையை நினைத்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
இங்கு இடைத்தேர்தல் என்றால் ஒரு ஊரையே அமைச்சரிடம் கொடுத்து விடுகிறார்கள்

எவ்வளவு செலவு எவ்வளவு பணம் கொடுத்து ஓட்டு வாங்க வேண்டும்! எப்படி இடைத்தேர்தலை லஞ்ச லாவண்யம் மூலம் கைப்பற்ற வேண்டும் என்றெல்லாம் மிக மோசமான முறையில் திட்டமிட்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதை நினைத்தால் கால வேறுபாடுகளைப் பற்றி கவலை தான் மிஞ்சுகிறது.

இன்னும் சொல்வதானால் நல்லகண்ணு அவர்கள் தொ மு சி ரகுநாதன் மு அழகிரிசாமி கி ராஜநாராயணன் ஜெயகாந்தன் பொன்னிலன் தி க சி கு சின்னப்ப பாரதி கவிஞர் சிற்பி கவிஞர் தமிழ்ஒளி பாவலர் வரதராஜன் முகவை ராஜமாணிக்கம் திருமூர்த்தி கே சி எஸ் அருணாசலம் கவிஞர் மீரா கவிஞர் பரிணாமன் கவிஞர் கந்தர்வன் கவிஞர் ரசூல் போன்ற இலக்கிய படைப்பாளிகளையும் அடிக்கடி சந்தித்து பேசுவததை வழக்கமாக கொண்டிருந்தார். நல்லகண்ணு அரசியல் அறிதிறன் கொண்டவர் மட்டுமில்லாமல் இலக்கியத்திலும் வாசிப்பிலும் மிக நுட்பமானவர்! பிற்காலத்தில் நா வானமா மலை அவர்கள் ஆய்விலும் இவரது கவனம் இருந்தது!

பேராசிரியர் ஆ. சுப்பிரமணியம் டாக்டர் நெ து ராஜகுமார் முனனவர் முத்துமோகன் மார்க்ஸீய கலை இலக்கிய ஆய்வாளர் பேராசிரியர்திசு நடராஜன் வி கிருஷ்ணமூர்த்தி தோத்தாத்ரி தேவ பேரின்பன் இன்றைக்கு உள்ள சி மகேந்திரன் தமிழ்ச்செல்வனோடும் பரிட்சயங்களை மேற்கொண்டு இன்று வரை இலக்கிய விவாதங்களையும் நிகழ்த்தி வருகிறார். இவர்களோடு மட்டுமல்லாமல் மேலாண்மை பொன்னுச்சாமி தனுஷ்கோடி ராமசாமி கோ மா கோதண்டம் ஸிரிதர கணேசன் மற்றும் எனது அன்பு மகளான லீனா மணிமேகலை போன்றவர்களுடன் கடந்த காலங்களில் கலந்து பேசி என்ன விதமான இலக்கியப் பணிகள் நடக்கிறது.

என்பதை அவ்வப்போது தெரிந்து கொள்வார். தொலைபேசியில் அடிக்கடி விசாரித்துக் கொள்வார் இப்படி இலக்கியத்திலும் நல்ல கண்ணு அவர்கள் ஒரு தலைசிறந்த பண்பாளர்! இலக்கியத்தையும் அரசியலலையும் தனது இரு கண்களாகப் பாவித்தவர்! அந்த வகையில் அரசியல் பொருளாதாரம் இலக்கியம் களப்பணிகள் எல்லாவற்றிலும் ஆலோசனைகளைத் தரத்தக்கவர்.

அதேபோல் சிறு குறு விவசாயிகள் விவசாயக் கூலிகள் இருவரின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தீவிரமான கருத்து உடையவர் அத்தகைய போராட்டங்கள் இந்தியா போன்ற விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் அவசியமானது என்பதில் அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. எங்கள் ஊர் கோவில்பட்டிக்கு வந்தால் இந்த வருடம் வத்தல் விலை சரியாக இருந்ததா பருத்தி விலையில் நியாயம் கிடைத்ததா என்று சங்கரன்கோவில் சந்தைகளில் விவசாயிகளைச் சந்திக்கும்போது விசாரித்துவிட்டு போவார். பத்து வருடத்திற்கு ஒருமுறை தான் எங்கள் பகுதி விவசாயிகள் லாபம் பார்ப்பார்கள்.

அத்தகைய நிலைமைகளை உணர்ந்து மிகச் சன்னமான குரலில் அவர்களிடம் அவர்களின் நலன்களை பற்றி விசாரித்துக் கொண்டு உள்ள பிரச்சனைகளையும் தெரிந்து கொண்டு அதற்கான அடுத்தகட்டப் போராட்டங்களை திட்டமிட்டு விட்டுத்தான் அங்கிருந்து செல்வார் அவ்வளவு எளிய மனிதர்.

அரசியல் களத்தில் வயது முதிர்ந்த தலைவர்கள் பலரும் இன்று நல்லகண்ணு அவர்களைப் போல இந்திய அளவில் இல்லை. அருமைக்குரிய தலைவர் நல்ல கண்ணு!

ஒரு நூற்றாண்டை எட்டிய நிலையில் ஒரு தத்துவத்தை போல நம்முடன் நலமாக இருக்கிறார். தமிழகத்தில் 90 வயதைக் கடந்த ஹண்டே போன்ற மூத்த தலைவர்களும் இருக்கிறார்கள் என்பது ஞாபகத்தில் உள்ளது! அது தென்புலத்து ஆயுள் என்று நினைக்கிறேன்.

நல்ல கண்ணு அவர்களுக்கும் எனக்குமான அறிமுகம் 1970 இல் நிகழ்ந்தது என்று நினைக்கிறேன்.

எங்கள் சட்டமன்ற உறுப்பினர் அழகிரிசாமி மூலம் அவர் திருநெல்வேலியில் வைத்து எனக்கு அறிமுகம்!

செயின்ட் ஜார்ஜ் பாளையங்கோட்டை கல்லூரியில் படித்த மாணவர் லூர்து நாதன் மாஞ்சோலை கூலி விவகாரத்தின் போது காவலர்களால் தாக்கப்பட்டு தாமிரபரணி படுகொலையில் இறந்தபோது நான் ஸ்தாபன காங்கிரஸ் இருந்தேன்.

இந்த படுகொலை பற்றி விசாரிக்க மு கல்யாணசுந்தரம் அவர்களை அழகிரி சாமி அழைத்து வந்த போது
நான் நல்ல கண்ணுவை நேரில் சந்தித்து உரையாடினேன்.

பிறகு அழகிரிசாமி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி சார்பில் நின்று பணியாற்றிய போது தோழர் நல்ல கண்ணு அவர்கள் எங்களது குருவிகுளம் வட்டாரத்தில் தேர்தல் பணியாற்ற வந்தார்.

அந்த சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வந்து மதியம் உணவு உண்டபின் சற்று ஓய்வெடுத்து விட்டுப் பிறகு மீண்டும் கிராமங்களுக்குப் பிரச்சாரத்திற்கு செல்வது வழக்கமாக இருந்தது.

அப்போது மஞ்சளும் கருப்புமாக பெயிண்ட் அடிக்கப்பட்ட (டாக்ஸி) வாடகை கார் தான் கிடைக்கும்! 1970 1980களில் இப்போது உள்ளது போல பல வகையான ஏசி கார்கள் எல்லாம் கிடையாது.

அந்த ஒரே காரில் நானும் நல்ல கண்ணுவும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் கைகளில் மைக் வைத்துக்கொண்டு மேலே ஒலிபெருக்கிகளைக் கட்டி கிராமத்தின் புழுதி சாலைகளில் பிரச்சாரத்திற்கு போவோம்.

அக்காலத்தில் கிராமத்தில் உள்ள சிறுவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்து காரில் பின்பாக ஓடி வருவார்கள்.

தோழர்கள் சிறு பையன்களுக்கெல்லாம் நோட்டீஸ் இல்லை போங்கள் என்று சொல்லுவார்கள். ஆனாலும் நல்ல கண்ணு அவர்கள் சிறுவர்களுக்கு தான் முதலில் கொடுக்க வேண்டும் அவர்களுக்கு கொடுங்கள்

அந்த அரிவாள் கதிர் சின்னத்தை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதை அவர்கள் பார்க்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு கொடுக்கச் சொல்லித் தூண்டுவார்.

1986இல் அழகிரி சாமியோடு எனது திருமணத்திற்கு வந்த நல்லகண்ணு அவர்கள் கலைஞரையும் சந்தித்தார்!

அதே நாளில் தான் கலைஞரும் பிரபாகரனையும் சந்தித்தார்!

இதற்குப் பிறகும் அவருடன் பல்வேறு வகையான சந்திப்புகள் கலந்துரையாடல்கள் எனக்கு நிகழ்ந்திருக்கின்றன. எவ்வளவு வயதானாலும் திடமாக பல்வேறு அரசியல் சம்பவங்கள் வாசிப்புகள் மனிதர்கள் எல்லாவற்றையும் மிக ஞாபகமாக மனதில் வைத்திருப்பவர் நல்லகண்ணு.

களங்கமற்ற கறை படியாத நேர்மையான துணிச்சலான மக்களுக்கு பணி செய்வதே தமது கடமை என நினைக்கும் இம்மாதிரியான தலைவர்கள் பதவிகளைப் பெறாமல் இருப்பது தான் நமது துரதிர்ஷ்டம். கட்சி தனக்கு திரட்டிக் கொடுத்த ஒரு கோடி ரூபாயைக் கூட கட்சியின் வளர்ச்சி பணிக்கென பாதியையும் விவசாய சங்கத்திற்கு என பாதியையும் திருப்பிக் கொடுத்தவர்.

அப்படியான அருமைத்தோழர் நல்லகண்ணு அவர்களுடன் பயணித்த வகையில் எனது மனதில் அவருடன் ஈடுபட்ட அல்லது நான் இயங்கிய பல வரலாற்று போராட்ட அரசியல் ஞாபகங்கள் நிழலாடுகின்றன.
சித்தாந்த நிலைமைகள் பண்பட்டுவரும் காலம் வரை தன் முழு வாழ்நாளையும் அதற்கென்றே பொறுப்பேற்றுக் கொண்ட அற்புதமான ஒரு மனிதர்.

அவரது எளிமை ஒரு
இந்தியத் தத்துவம்.

போராட்ட குணங்களோடு நம்மிடையே நீண்ட காலம் வாழ்ந்து இன்று மறைந்திருக்கும் நல்லகண்ணு அவர்களை நினைவு கூறும் பொழுது நீண்டகாலமாகக் கம்யூனிஸ்ட் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ் .அழகிரிசாமி
எஸ் எஸ் தியாகராஜன், பிதப்புரம் ராமசுப்பு,கோடாங்கால் கிருஷ்ணசாமி ராமமூர்த்தி எட்டையபுரம் பாரதி மன்றம் இளசை அருணா வழக்கறிஞர் என்டி வானமா மலை என எங்கள் திருநெல்வேலி தெற்கு சீமையைச் சேர்ந்த அக்காலத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் என பல மாபெரும் தலைவர்கள் நினைவுக்கு வந்து போகிறார்கள்.

அவர்களெல்லாம் மறைந்து போய்விட்டார்கள். அவர்களுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட வரலாற்றில் இடம்பெற்று நான்கு தலைமுறைகளுக்கு மேல் இந்த அரசியல் வாழ்வில் பலரையும் பார்த்து இறுதிவரை அப்பழுக்கற்ற ஒரு மனிதராய் மறைந்திருக்கும் தோழர் நல்லகண்ணு அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும்!!

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவராக நீண்ட நெடிய காலம் பயணித்தவர், #நல்லகண்ணு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாள் 1925 டிசம்பர் 26ஆம் தேதி. நல்லகண்ணு பிறந்ததும் அதே நாளில்தான் என்பது மிக நெகிழ்ச்சியான தகவல்.

கடந்த கால கமயூனிஸ்ட் கட்சியின் இறுதி அத்தியாயமாக வரலாற்றில இருக்கிறார். தொண்டால் பொழுதளந்த தோழர் இரா. நல்லகண்ணு விடைபெற்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவராக நீண்ட நெடிய காலம் பயணித்தவர், #நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாள் 1925 டிசம்பர் 26ஆம் தேதி. நல்லகண்ணு பிறந்ததும் அதே நாளில்தான் என்பது மிக நெகிழ்ச்சியான தகவல். கடந்த கால கமயூனிஸ்ட் கட்சியின் இறுதி அத்தியாயமாக வரலாற்றில இருக்கிறார்.

ksrpost

கேஎஸ்ஆர் போஸ்ட்

25-2-2026.

பிரபல அரசியலாளர், வழக்கறிஞர், ‘அக்கப்போர்’ நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அக்கப்போர் நாளிதழ் Akkappore.com / சொடுக்குங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)