
உயிர் நண்பன் பாக்யராஜ் செய்த துரோகம்; பென்ஸ் காரில் வந்தவரை கல்லால் அடிக்க முயன்ற சுந்தர்ராஜன்: க்ளாசிக் ப்ளாஷ்பேக்
பாக்யராஜூவுடன் இரட்டை இயக்குனராக வர வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்த சுந்தர்ராஜனுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்த பாக்யராஜ் பல படங்களை இயக்கி நடித்து முத்திரை பதித்துள்ளார். அவருடன் இயக்குனராக வேண்டும் என்று வந்தவர் தான் ஆர்,சுந்தர்ராஜன். பின்னாளில் இருவரும் பிரிந்த நிலையில், பாக்யராஜ் காரில் வந்தபோது அவரை கல்லால் அடிக்க முயற்சித்துள்ளார் சுந்தர்ராஜன் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னாளில் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என புதுப்புது அவதாரம் எடுத்து வெற்றி கண்டவர் தான் பாக்யராஜ். இவரின் சிறு வயது நண்பன் தான் ஆர்.சுந்தர்ராஜன். இருவரும் 1974-ம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தை பார்த்துவிட்டு, இயக்குனர் ஆக வேண்டும் என்று சென்னைக்கு வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பாரதிராஜா என்ற இயக்குனர் படம் எடுக்க, அவருக்கு ஒரு உதவியாளர் தேவையாக இருந்துள்ளர்.
அப்போது தூயவன் என்பவர், சுந்தர்ராஜனிடம் நீ போய் அவரிடம் சேர்ந்துகொள் என்று சொல்ல, அவரோ, பாக்யராஜூவை சென்று சேருமாறு கூறியுள்ளார். அதன்படி பாக்யராஜ் அவருடன் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பின்னாளில் நடிகராவும் இயக்குனராகவும் வளர்ந்துவிட்டார். ஆனால் அவருடனே இரட்டை இயக்குனராக வர வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்த சுந்தர்ராஜனுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துள்ளார்.
இது குறித்து இந்தியா க்ளிக்ஸ் யூடியூப் சேனலில் பேசிய சுந்தர்ராஜன், பாக்யராஜ் உதவி இயக்குனராக இருந்தபோது எனக்கு ஒரு கடிதம் எழுதினான். நீ ஊருக்கு போ, நான் இயக்குனர் ஆனதும் என்னை மறுபடியும் கூப்பிடுகிறேன். அதற்குள் தங்கைகளுக்கு திருமணம் செய்து வை என்று பக்கம் பக்கமாக எழுதி இருந்தான். ஆனால் நான் ஒரு பெரிய இன்லேண்ட் லெட்டர் வாங்கி அதன் நடுவில் பெரிதாக நன்றி என்று மட்டும் எழுதி அனுப்பிவிட்டேன். அதன்பிறகு பாக்யராஜ் இயக்குனர் நடிகராக மாறிவிட்டார்.
அவரின் மௌனகீதங்கள் படம் ரிலீஸ். அந்த படத்தை பார்த்தால் நான் பட்டினியாக இருக்க வேண்டும். என்னிடம் ரூ2 தான் இருந்தது. ஆனாலும் படத்தை பார்த்தேன். அந்த படத்தை பார்த்த பிறகு தான் நண்பன் நாம் இல்லாமலே ஜெயித்துவிட்டான். இனிமேல் அவனுக்கு நான் தேவையில்லை. ஆனால் இதன்பிறகு நான் என்ன செய்வது என்று தெரியாமல் வழித்துக்கொண்டிருந்தேன்.
அந்த சமயத்தில் மௌனகீதங்கள் பார்த்த ஒரு தயாரிப்பாளர் பாக்யராஜூவுக்கு பென்ஸ் கார் கொடுத்து அடுத்த படத்தை பண்ண சொல்லி கேட்டு பாக்யராஜூவும் ஒப்புக்கொண்டார். அவன் தனது நண்பர்களுனுடன் அந்த காரில் வர நான் தேனாம்பேட்டை நோக்கி நடந்து சென்றுகொண்டு இருந்தேன். அப்போது, காரில் வர என்று பாக்யராஜ் சொல்ல, காரில் இருந்த பழனிச்சாமி என்னை அழைத்தான். ஆனால் நான் வரவில்லை என்று சொல்ல, மீண்டும் மீண்டும் அழைத்தபோது நான் கல் எடுத்து அடிக்க போய்விட்டேன். இதை பார்த்த பாக்யராஜ் அவன் வரமாட்டான் நீ வா நாம போகலாம் என்று சொல்லிவிட்டான்.
எந்த மௌண்ட் ரோட்டில் நானும் பாக்யராஜூவும் பட்டினியாக நடந்து சென்றோமோ அதே ரோட்டில் அவன் பென்ஸ் காரிலும் நான் நடு ரோட்டிலும் சென்றேன் என்று ஆர்.சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.