சொந்தமாக ஒரு சைக்கிள் கூட இல்லை.. கைக்கு வந்த ரூ.1 கோடியை வேண்டாம் என்று.. மாதம் வெறும் ரூ.2000ல் வாழ்ந்த நல்லகண்ணு.. கதை தெரியுமா?

தமிழக அரசியலின் ‘அறம்’ என்கிற சொல்லுக்கு உருவம் கொடுத்தால், அது முதுபெரும் இந்திய கம்யூ. தலைவர் நல்லகண்ணுவாகத்தான் இருக்கும். 101-வது வயதில் அவர் இன்று விடைபெற்றிருப்பது, ஒரு கட்சியின் இழப்பல்ல; இந்த மண்ணின் அரசியல் எளிமையின் மறைவு!

அந்த ஒரு கோடி ரூபாய்… அந்த ஒரு சொட்டு வியர்வை!
அரசியல்வாதிகள் என்றால் ‘சொத்து சேர்ப்பவர்கள்’ என்கிற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் நல்லகண்ணு. அவரது 80-வது பிறந்தநாளில், கட்சித் தொண்டர்கள் வியர்வை சிந்திச் சேர்த்த ஒரு கோடி ரூபாயையும், ஒரு புத்தம் புதிய காரையும் நல்லகண்ணுவிடம் அன்பளிப்பாக வழங்கினார்கள். மேடையில் அதனைப் பெற்றுக்கொண்ட அடுத்த நொடியே, “இது கட்சியின் பணம், கட்சிக்கே சேரட்டும்” எனச் சொல்லி அங்கேயே திருப்பிக் கொடுத்தார்.

சொந்தமாக ஒரு சைக்கிள் கூட வைத்துக்கொள்ளாத அந்தத் தியாகியின் கைகளில், கோடி ரூபாய் என்பது வெறும் காகிதமாகத்தான் தெரிந்தது. சமீபத்தில் தமிழக அரசு வழங்கிய ‘தகைசால் தமிழர்’ விருதோடு கிடைத்த 10 லட்சம் ரூபாயையும், தன் கையில் இருந்த 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்குத் தந்துவிட்டு, வாடகை வீட்டுக்குத் திரும்பிய அந்த எளிமைதான் ‘நல்லகண்ணு’ எனும் வரலாறு!

தன்னிடம் இருந்ததை எல்லாம் கொடுத்துவிட்டு.. கட்சியின் மாதம் ரூ.2000 ஊதியத்தில் வாழ்ந்து கொண்டு இருந்தார்.

மீசை இழந்த வரலாறு… போராட்டமே வாழ்வாதாரம்!

நல்லக்கண்ணுவின் முகத்தில் மீசை இருக்காது. அது ஒரு அலங்காரமல்ல, அது ஒரு ரணம்!

1949-ல் நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அன்றைய காவல்துறை ஒரு சிகரெட் துண்டால் அவர் உதடுகளைச் சுட்டது. அந்தத் தழும்பைத் தாங்கிய நல்லக்கண்ணு, “காவல்துறையின் அடக்குமுறைக்கு அடையாளமாக இனி என் முகத்தில் மீசை இருக்காது” எனச் சபதமேற்று, மரணம் வரை அதை மாற்றிக் கொள்ளவில்லை.

இயற்கைக்காக நின்ற ஒற்றை மனிதன்!
வெறும் மேடைப் பேச்சோடு நின்றவர் அல்ல அவர். 85 வயதில், தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க நீதிமன்றம் சென்று போராடி, 5 ஆண்டுகளுக்குத் தடை வாங்கிக் கொடுத்தார். சி.ஐ.டி நகர் குடியிருப்பு காலி செய்யச் சொன்னபோது, ஒரு முகம் சுழிப்பு கூட இல்லாமல் பெட்டிப் படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்த அந்த நிதானம், இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள் கற்க வேண்டிய பாடம்.

“பெரியார் தமிழ்நாட்டின் ஒரு கண் என்றால், நல்லகண்ணு மற்றொரு கண்” – கலைஞர் கருணாநிதி ஒருமுறை சொன்ன இந்த வார்த்தைகள் இன்று உண்மையாகிவிட்டன. தமிழகம் இன்று தன் ஒரு கண்ணை இழந்து நிற்கிறது.

“துவைத்துப் போட்ட வேட்டி… துருப்பிடிக்காத நேர்மை!”
நல்லகண்ணு அவர்களின் அறைக்குள் நுழைந்தால் அங்கே தெரிவது ஒரு பழைய மரக்கட்டில், சில புத்தகங்கள், அப்புறம் ஓரமாய் மடித்து வைக்கப்பட்ட இரண்டு ஜோடி கதர் வேட்டிகள் மட்டுமே. தமிழகத்தின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள் இருந்த ஒரு மனிதர், தன் வாழ்நாளின் கடைசி மூச்சு வரை ஒரு ‘வாடகை வீட்டின்’ சின்னஞ்சிறிய அறையில்தான் வாழ்ந்தார் என்பது இன்றைய ‘கார்ப்பரேட்’ அரசியல்வாதிகளுக்கு ஒரு புரியாத புதிர்.

சாலையில் நடந்து சென்றால், ஒரு சாதாரணக் குடிமகனைப் போல பேருந்துக்காகக் காத்திருப்பார்; யாராவது கார் கதவைத் திறந்து “அய்யா ஏறுங்கள்” என்று சொன்னால், “பரவாயில்லைப்பா, சொகுசு கார் எல்லாம் வேண்டாம்” என்று புன்னகைப்பார். அதிகாரத்தின் வாசனை கூட தன் மீது பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் காட்டிய அந்தப் பிடிவாதம் இருக்கிறதே… அதுதான் நல்லகண்ணு எனும் ஆளுமையை இமயமலையை விட உயரமாகக் காட்டுகிறது. அந்த ஒற்றை வேட்டி மனிதனின் மறைவு, தமிழ் மண்ணின் ஒரு ‘தார்மீகக் குரலை’ மௌனமாக்கிவிட்டது

மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நல்லக்கண்ணு, இன்று நம்மிடமிருந்து விடைபெற்றார். அவர் விட்டுச் சென்றது சொத்துக்களை அல்ல… ஒரு சொட்டு கூடக் கறைபடியாத நேர்மையை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)