வால்பாறை வேன் விபத்து ; 9 பேர் பலி ; ஆசிரியர்களின் கனவுகளை பறித்த டிரைவரின் அலட்சியம்….!! மக்கள் சொல்வது என்ன? அக்கப்போர் நாளிதழ் akkappore.news

9 ஆசிரியர்களின் கனவுகளை பறித்த டிரைவரின் அலட்சியம்.. வால்பாறை மக்கள் சொல்வது என்ன?

வால்பாறை: வால்பாறை செல்லும் சாலையில் உள்ள 13 வது கொண்டை ஊசி வளைவு மிகவும் குறுகலான வளைவுகளில் ஒன்று.

இந்த வளைவு திரும்பும் இடத்தில் தடுப்பு சுவரை தாண்டி தவறி விழுந்தால் நேராக 9 வது வளைவில் தான் விழுவோம். களப்பணியின் போது நாங்கள் இதன் வழியே 13 வது வளைவில் இருந்து கீழே நேரடியாக 9 வது வளைவு வரை சென்று இருக்கிறோம் என்று பொதுமக்கள் வால்பாறை சம்பவம் குறித்து விவரிக்கிறார்கள். டிரைவரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவே இதற்கு காரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பாலமுருகன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வால்பாறை செல்லும் சாலையில் உள்ள 13 வது கொண்டை ஊசி வளைவு மிகவும் குறுகலான வளைவுகளில் ஒன்று. நன்றாக தெரிந்தவர்கள் மேலிருந்து கீழே வரும் பொழுது மிக கவனமாக தான் இந்த வளைவில் திரும்புவார்கள். தெரியாதவர்கள் மிக அலட்சியமாக மிக வேகமாக திருப்புவதை நாங்கள் பலமுறை பார்த்து இருக்கிறோம்.

இந்த வளைவு திரும்பும் இடத்தில் தடுப்பு சுவரை தாண்டி தவறி விழுந்தால் நேராக 9 வது வளைவில் தான் விழுவோம். களப்பணியின் போது நாங்கள் இதன் வழியே 13 வது வளைவில் இருந்து கீழே நேரடியாக 9 வது வளைவு வரை சென்று இருக்கிறோம். வழியாக 12,10 இரண்டு வளைவுகள் இதன் வழியாக வராது. நேரடியாக 9 வது வளைவு சென்று விடும்.

14 வது கொண்டை ஊசி வளைவில்

14 வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 13 வது கொண்டை ஊசி வளைவு வரும் வரையிலான மலைசாலையில் வேகமாக தான் பலர் வண்டி ஓட்டுகிறார்கள். வளைவுகள் பெரிதாக இல்லாத நேரான சாலை இருப்பதால் திடீரென வளைவு வந்தவுடன் பிரேக் பிடித்து வண்டியின் வேகத்தை மட்டுப்படுத்தினால் மட்டும் தான் திருப்ப இயலும். அப்போது ப்ரேக் சரியாக பிடிக்கவில்லை எனில் நிச்சயம் தடுப்பை தான் வாகனம் விபத்திற்கு உள்ளாகும்.

விபத்து எப்படி

விபத்தின் போது என்ன நிகழ்ந்தது என்பது தற்போது தெரிய வரவில்லை என்ற போது இப்படி தான் நிகழ்ந்து இருக்கும் என யூகித்து தான் பேச இயலும்.வாகனம் ஓட்டுபவர்கள் மிக கவனமாக, நிதானமாக ஓட்ட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். உங்களை நம்பி தான் பல குடும்பங்கள் இருக்கின்றன . உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைட்டும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியிருந்தார்.

டிரைவர் மீது வழக்கு

பாலமுருகன் கூறியதை நிரூபிக்கும் வகையிலேயே வால்பாறை விபத்திற்கு டிரைவரின் கவனக்குறைவு மற்றும் அதிவேகமாக ஓட்டியது தான் காரணம் என்று போலீசார் பதிவு செய்த வழக்கின் மூலம் உறுதியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து காடம்பாறை போலீசார் வேன் டிரைவர் முகமது யாசிக் மீது கவனக்குறைவாக அதிக வேகத்தில் வேனை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உருக்கமான தகவல்கள்

வால்பாறை மலைப்பாதையில் நடந்த வேன் விபத்தில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளி ஆசிரியர், அவரது மனைவிக்கு நேர்ந்த துயரம் பற்றி பார்ப்போம். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனிப்பரம்பு பகுதி பாங்கு பரம்பள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஆசிரியைகள் உள்ளிட்டோர் கோடை விடுமுறைக்கு வால்பாறை செல்ல முடிவு செய்தனர். வால்பாறை என்பது கேரள எல்லையையொட்டி உள்ள பகுதி என்பதுடன் சாலக்குடி திருச்சூரை நேரடியாக இணைக்கும் அற்புதமான வனச்சாலையை கொண்ட சுற்றுலா தலம் ஆகும்.

13 பேர் சுற்றுலா

கோடை விடுமுறையையொட்டி நேற்றுமுன்தினம் அதிகாலை பரம்பள்ளி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அஜிதா தலைமையில் ஆசிரியைகள், அவர்களது குடும்பத்தினர் என 13 பேர் வேனில் சுற்றுலா வந்தனர். முன்னதாக அவர்கள் திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்துவிட்டு, வால்பாறைக்கு வந்தனர். வால்பாறையில் உள்ள இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு, மாலை மலப்புரத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். வேனை டிரைவர் முகமது யாசிக் (வயது 21) ஓட்டியிருக்கிறார்.

எப்படி நடந்தது

மாலை 5.20 மணியளவில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவில் இறக்கத்தில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் அங்குள்ள தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. தொடர்ந்து வேன் உருண்டு சுமார் 250 அடிக்கு கீழே உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவு சாலையில் வந்து விழுந்து சுக்குநூறானது.

யார் யார்

இதில் வேனில் இருந்த ஆசிரியைகள் உட்பட 9 பேர் பலியானார்கள். பள்ளி தலைமை ஆசிரியை அஜிதா (54), ஆசிரியை ரம்லா (52), ஜஹேரா (43), ஆஷா (41), ருக்கியா (39), ஷகிலா (37), ஆசிரியர் அப்துல் மஜீத் (43), சமையல் ஊழியர் சஜிதா (45), ஹிஷாம் (12) ஆகிய 9 பேர் என்பது தெரியவந்தது. மேலும் படுகாயம் அடைந்தவர்கள் டிரைவர், நவ்சாத் (39), ஷஹாதீன் (11), மஸ்ஸின் (10) என்பது தெரியவந்தது.

புது வீடு கட்டினார்

விடுமுறையையொட்டி அவர்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்ட நிலையில் வால்பாறைக்கு வர முடிவு செய்தனர். அதன்படி முதலில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, வால்பாறைக்கு சுற்றுலா வந்து மகிழ்ந்து புகைப்படம், வீடியோ எடுத்து பள்ளி வாட்ஸ்-அப் குழுவில் பகிர்ந்துள்ளனர். விபத்தில் இறந்த ஆசிரியர் அப்துல் மஜீத் மற்றும் ஆசிரியை ருக்கியா இருவரும் கணவன்-மனைவி என்பது தெரியவந்தது. இதில் அப்துல் மஜீத் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி. சமீபத்தில் தான் அவர்கள் சொந்தமாக புதுவீடு கட்டி அங்கு குடியேறி ரம்ஜான் பண்டிகையையும் கொண்டாடினர். இந்நிலையில் வால்பாறைக்கு தங்களது குழுவுடன் சுற்றுலா வந்த இடத்தில் விபத்தில் சிக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது. விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் சொந்த ஊரான மலப்புரம் பாங்கு பரம்பள்ளி கிராமத்திற்கு ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆரோ செல்வா பதிவு

இதனிடையே பிரபல சுற்றுலா வழிகாட்டியா ஆரோ செல்வா என்பவர் அந்த பகுதியில் விபத்து நடந்தது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “விபத்து எப்படி நடந்தது, நடந்திருக்கும் என்று என்னிடம் நிறைய நண்பர்கள் கேட்கிறார்கள்.,மலை பகுதி பயணங்கள் மிகவும் சவாலான ஒன்று., நிறைய பேர் அதை அவ்வளவு விரும்பி பயணம் செய்வார்கள் சிலருக்கு அது கடினம் காரணம் கடினமான வளைவுகள் ஏற்றம் இறக்கம்.,

இதில் ஏறுவதை விட இறங்குவது மகவும் சிரமமானது., பொதுவாக மலை பகுதிகளில் நாம் பிரேக் பயன்படுத்துவதை முடித்தவரை தவிர்க்க வேண்டும் என்ன சொல்றிங்க பைத்தியகார தனமான யோசனை என்று தான் நினைக்க தோன்றும்.

பிரேக் லைனர்கள்

பெரிய இறக்கங்களில் தொடர்ச்சியாக பிரேக் பயன்படுத்தும்போது, பிரேக் டிரம் (Brake Drum) அதிகப்படியாக சூடாகிறது (Overheating). இதனால் பிரேக் லைனர்கள் சூடாகி ஆகி, பிரேக் சுத்தமாகப் பிடிக்காமல் போய்விட கூடிய சூழல் ஏற்படும். என்ஜின் பிரேக்கிங் (Engine Braking):லோ-கியரில் (Low Gear) இறங்கும்போது என்ஜினே வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும். இதையே ‘என்ஜின் பிரேக்கிங்’ என்கிறோம். இப்படிச் செய்யும்போது, மிகக் குறைந்த அளவில் மட்டும் பிரேக் பயன்படுத்தி பாதுகாப்பாக வண்டியை இறக்கலாம்.

என்ன நடந்திருக்கும்

நான் சொல்லும் இவற்றை மலை பகுதி அனுபவம் மிக்க ஓட்டுநர்கள் நிச்சயம் செய்வார்கள், சமதள ஓட்டுநர்கள் பலருக்கும் இது தெரியாமல் வளைவில் வந்து பிரேக் பிடித்து அது நிற்காமல் போய் விபத்தில் முடிக்கிறது., இதையே தான் ஊட்டி மசினகுடி, கல்லட்டி சாலையில் TN43 ஊட்டி வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது., இது தெரியாமல் உள்ளூர் வாகனங்கள், ஊட்டி டிரைவர் மட்டும் தான் விடுகிறார்கள், என்று மக்கள் சொல்லும் போது நான் நண்பர்களிடம் காரணம் சொல்லுவேன்., 13 வது கொண்டை ஊசி வளைவில் இருந்து வண்டியானது மரங்களில் மோதி 9வது வளைவை தாண்டி துக்கி எறியபட்டு இருக்கிறது. மிகவும் வருத்தமான செய்தி.பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள், மெதுவாக, பிரேக், என்ஜின், டயர் எல்லாம் ஒவ்வொரு முறையும் சரி செய்து கவனித்து பயணப்படுங்கள்” என்று கூறியுள்ளார்.

விபத்து #வாகனம் #சாலை #போக்குவரத்து #வால்பாறை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top